Welcome Scraps, Graphics and Comments
More Images & Scraps
Custom Search

சிறப்புச் செய்திகள்


அதிகாலை எழுந்து
உழவு மாடுகளை
அவிழ்த்துக் கொண்டு
கதிரவன் கண்ணில்
தெரியும் முன்பே
நிலத்தில் கால் பதித்து
கையில் ஏர் பிடித்து
கால் நோக உழவு செய்து
நாள் பார்த்து நடவு செய்து
களை பறித்து உரமிட்டு
காலம் பாராமல் காவல் காத்து
பனியிலும் வெயிலிலும் பாடுபட்டு
பயிர் விளைந்ததும் பதமாய் அறுத்து
அறுவடை செய்த நெல்லை
வந்த விலைக்கு விற்று
பட்டணத்தில் படிக்கும்
மகனுக்கு பணம் அனுப்புகிறார்
பணம் வந்ததும் செல்ல மகன்
பதறியடித்து ஓடுகிறான் ஏசி பார்'க்கு...
பழைய பாக்கி செலுத்திவிட்டு
புதிய கணக்கு தொடங்க...!
வயலில் காயும் சில தந்தைகளின்
தேகம் மட்டுமல்ல கனவுகளும்
கருகத்தான் செய்கின்றன...!


யார் இந்த மாமனிதர் ?!



தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!

'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது. எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார்?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
குடும்பம்
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.
மரங்கள் மட்டும் அல்ல

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.
இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!
'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்...



திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!



எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!

நாம் ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் குறைந்தது வீட்டுக்கு இரண்டு மரம் வளர்ப்போம்...!!! அதுவே மிக பெரிய பசுமை புரட்சியை உண்டாக்கும்


நம் நாட்டிற்கு உழைப்பால் பெருமை சேர்த்தவர்களின் வருசையில் திரு .ரத்தன் டாட்டா !!!!



இந்தியாவில் பம்பாயில், 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தவர்), ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, அவரது குடும்பத்தினரின் பிற்கால சந்ததியினரின் தொகுதியாக விரிவாக்கிய தொழில் திரளாக விளங்கும், இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். அவர், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

மும்பையின் வளமும் புகழும் மிகுந்த டாடா குடும்பத்தில் ரத்தன் டாடா பிறந்தார். அவர் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ரத்தன், டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா வின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம் இடர்ப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. 1940-ஆம் ஆண்டுகளின் இடையே அவரது பெற்றோர்கள் பிரிந்த போது அவருக்கு ஏழு வயதாகவும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயதாகவும் இருந்தது. அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறியபின், ரத்தனையும் அவரது சகோதரரையும் அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாய் வளர்த்தார்.

ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கை

ரத்தன் டாடா, 1962 ஆம் ஆண்டில் கார்நெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பிஎஸ்சி இளங்கலை பொறியியல்பட்டம் பெற்றார். பின்னர், 1975 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார். ஜே. ஆர். டி. டாடா வின் அறிவுரையின்படி, ஐபிஎம் நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறி விட்டு அவர் 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தில் சேர்ந்தார். அவர் முதலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்ற ஜாம்ஷெட்பூருக்கு சென்றார். அவர் பிற உடலுழைப்புப் பணியாளர்களுடன் (blue-collar employees) சேர்ந்து சுண்ணாம்புக்கல் வாருதல் மற்றும் சூளைகளைக்[3] கையாளும் பணிகளைச் செய்தார். கூச்சம் நிறைந்தவரான ரத்தன் டாடா, சமூகக் கவர்ச்சி இதழ்களில் மிக அபூர்வமாகவே தோன்றுவார். பல ஆண்டுகளாக, மும்பை யின் கொலாபா மாவட்டத்தில், புத்தகங்களின் நெரிசல் மிகுந்த, நாய்கள் நிரம்பி வழியும் விடலைக் குடியிருப்பில் (bachelor flat) வாழ்ந்த அவர், வியக்கத்தக்க பெருந்தகையாக விளங்குகிறார்.

தொழில் வாழ்க்கை

1971 ஆம் ஆண்டில், மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் (Nelco) நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்வதைத் தவிர்த்து, உயர் தொழில்நுட்பப் பொருட்களை உருவாக்க முதலீடுகளை அந்நிறுவனம் செய்ய வேண்டும் என்று ரத்தன் யோசனை கூறினார். வழக்கமான ஆதாயப் பங்குகளைக் கூட ஒழுங்காக வழங்காத நெல்கோ நிறுவனத்தின் நிதி நிலை வரலாற்றைக் கருத்தில் கொண்ட ஜேஆர்டி, இந்த ஆலோசனையை ஏற்பதில் தயக்கம் காட்டினார். மேலும், ரத்தன் பொறுப்பை ஏற்றபோது நெல்கோ நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதனச் சந்தையில் 2 சதவீதப் பங்கும் விற்பனையில் 40 சதவீத இழப்பெல்லையும் கொண்டிருந்தது. ஆயினும், ஜே.ஆர்.டி., ரத்தனின் ஆலோசனைகளைப் பின்பற்றினார்.
1972 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், படிப்படியாக நெல்கோவின் சந்தைப் பங்கு 20 சதவீதத்தை எட்டியது. தனது இழப்புகளையும் அந்நிறுவனம் மீட்டெடுத்தது. ஆனால், 1975 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்ததுடன் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டில் தொழிற்சங்கப் பிரச்சினைகள் தோன்றின. எனவே, தேவை அதிகரித்தபோதும் அதற்கேற்ப உற்பத்தி பெருகவில்லை. இறுதியில் டாடாக்கள் தொழிற்சங்கங்களை எதிர்த்தனர். ஒரு வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஏழு மாதக் கதவடைப்பு நடந்தேறியது. ரத்தன், நெல்கோவின் அடிப்படைத் திறமைகளைத் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஆதரித்த போதும், அவரது முயற்சி தாக்குப்பிடிக்கவில்லை.

1977 ஆம் ஆண்டில், டாடா குழும வசமிருந்த எம்ப்ரஸ் மில்ஸ் துணி ஆலை, ரத்தனிடம் ஒப்படைக்கப் பெற்றது. அவர் அந்நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றபோது, அந்நிறுவனம் டாடா குழுமத்தின் நொடிந்த சில நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தது. ரத்தன் அதை மீட்டெடுத்ததுடன் ஆதாயப் பங்கும் அறிவித்தார். ஆயினும், குறைந்த தொழிலாளர் சார்புள்ள நிறுவனங்களிடமிருந்து வந்த போட்டியின் விளைவாக பல நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்ப்ரஸ் ஆலையைப் போன்று அதிகமான தொழிலாளர் படைகளைக் கொண்ட, நவீனமயமாக்கலுக்கு மிகவும் குறைவாக செலவழித்த நிறுவனங்களும் அவற்றில் அடங்கும். நிறுவனத்தில் ஒரு சிறு முதலீட்டை மேலும் செய்ய வற்புறுத்தினார், ஆனால் அது போதவில்லை. முரட்டுத்தன்மை வாய்ந்த நடுத்தரப் பருத்தித் துணியையே எம்ப்ரஸ் ஆலை உற்பத்தி செய்தது. இவ்வகைப் பருத்தித் துணிக்கான சந்தை பாதிப்புக்கு உள்ளாகியதால், எம்ப்ரஸ் ஆலை அதிக இழப்புக்குள்ளாகியது. நீண்ட காலத்திற்கு நிதி உதவிகளை, குழுமத்தின் பிற நிறுவனங்களில் இருந்து மாற்றி வழங்க டாடாவின் தலைமையகமான பம்பாய் ஹவுஸ் விரும்பவில்லை. எனவே, சில டாடா இயக்குனர்கள், குறிப்பாக நானி பல்கிவாலா, ஆலையை மூட முடிவு செய்தனர். இறுதியில், 1986 ஆம் ஆண்டில், ஆலையை மூடினார்கள். அம்முடிவால் ரத்தனுக்கு மிகுந்த மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னாளில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், வெறும் ஐம்பது இலட்சம் ரூபாய் இருந்திருந்தால் எம்ப்ரஸ் ஆலையை சீராக்கி நடத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார்.

1981 ஆம் ஆண்டில், குழுமத்தின் மற்றொரு பங்குதார நிறுவனமான டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். அந்நிறுவனத்தை, குழுமத்தின் செயல்திட்டங்களுக்கான சிந்தனைக் கொள்கலனாகவும், உயர் தொழில்நுட்ப வர்த்தகங்களுக்கான ஆக்க முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் மாற்றுவது அவரது பொறுப்பானது.
1991 ஆம் ஆண்டில், அவர் ஜே.ஆர்.டி. டாடா விடமிருந்து குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். வயதானவர்களை வெளியேற்றி இளைய மேலாளர்களை நியமித்தார். அதன் பிறகு, டாடா குழுமத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் அவர் பெரும் பங்காற்றினார். இன்று, இந்திய பங்குச் சந்தையில் உள்ள வணிக நிறுவனங்களில் மிக அதிகமான சந்தை முதலீடு உள்ளதாக டாடா குழுமம் திகழ்கிறது.
ரத்தனின் வழி காட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பொது நிறுவனமானது. டாடா மோட்டார்ஸ் நியூ யார்க் பங்குச் சந்தை யில் பட்டியலானது. 1998 ஆம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் அவரது சிந்தனையில் பிறந்த டாடா இண்டிகாவை அறிமுகப்படுத்தியது.
2007 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று, ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், டாடா சன்ஸ் நிறுவனம், எஃகு மற்றும் அலுமினியம் தயாரிக்கும் ஆங்கிலோ-டச்சு நிறுவனமான கோரஸ் குழுமத்தைக் கைப்பற்றியது. இக்கைப்பற்றல் மூலம் ரத்தன் டாடா இந்திய வணிகக் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற ஆளுமையானார். இந்த இணைப்பு உலகிலேயே ஐந்தாவது பெரிய எஃகு உற்பத்தியாளரை தோற்றுவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று, ரத்தன் டாடாவின் தலைமையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் நிறுவனத்தை ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திடமிருந்து வாங்கியது. ஒன்றாம் தரமாக உலகமே போற்றும் பிரித்தானிய தர அடையாளங்களான ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் ஆகிய இரண்டும் 1.15 பில்லியன் பவுண்டுக்கு (2.3 பில்லியன் டாலர்) விலை போனது இந்தியாவுக்கு பெருமை ஈட்டித் தந்தது.

சொந்த வாழ்க்கை

திரு ரத்தன் டாடா ஒரு உலோக நீல வண்ண மெசெராட்டி மற்றும் பெர்ராரி கலிபோர்னியா வாகனங்கள் வைத்துள்ளார். ஜேஆர்டி, ஓட்டுனர் வைத்துக்கொள்ளாமல் தனது சொந்த பியட் காரையே வேலைக்குச் செல்லவும் திரும்பவும் பயன்படுத்தியதைப் போலவே, ரத்தன் டாடாவும் தனது பழைய மாதிரி மெர்சடிஸ் செடானை தானாக ஓட்டிச் செல்வதையே விரும்புகிறார். அவர் சில சமயங்களில் தனது சொந்த ஜெட் விமானத்தில் பறப்பதை விரும்புகிறார். வணிக விமானப் போக்குவரத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத, வழக்கில் இல்லாத பால்கன் ஜெட் விமானம் ஒன்று அவரிடம் உள்ளது. அவர் திருமணம் புரிந்து கொள்ளவில்லை.

ரத்தன் டாடா பெரும்பாலும் குழுமத்தின் பணி வழித் தலைவர் அல்லது முதன்மைச் செயல் அலுவலராக உள்ளார். குழுமத்தின் பங்குதாரர் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் உள்ள அவரது மூலதனப் பங்குகளில் பெரும்பாலானவை, குடும்ப வழியில் பெற்ற பங்குகளே ஆகும். அவரது பங்கு ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவானதே. அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு, தோராயமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேறும்.டாடா சன்ஸின் மூலதனப் பங்குகளில் ஏறக்குறைய 66 சதவீதம், அசல் ஜாம்செட்ஜி குடும்ப உறுப்பினர்கள் நிறுவிய, பொதுநல அறக்கட்டளைகளிடம் உள்ளன. இதில் மிக அதிகமான பங்கு, ஜாம்செட்ஜியின் மைத்துனரான ஷபூர்ஜி பல்லோஞ்சி மிஸ்த்ரி வழியிலான குடும்பத்தினரிடம் உள்ளது. பங்குதாரர்களான அறக்கட்டளைகளிலேயே பெரியவை, சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை (இது ரத்தன் டாடாவிலிருந்து வேறுபட்டது) ஆகிய இரண்டும் ஆகும். இவை ஜாம்செட்ஜி டாடாவின் மகன்களின் குடும்பத்தாரால் தோற்றுவித்தவை. ரத்தன் டாடா, சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.[original research?]. சர் ரத்தன் டாடா, உலக சுற்றுச் சூழல்மாற்ற சகாப்தத்தில், இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடையாள முகமாகவும் அறியப்படுகிறார்.
[தொகு]

விருதுகளும் அங்கீகாரங்களும்

இந்தியாவில் பல்வேறு அமைப்புகளில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றும் ரத்தன் டாடா, வணிகம் மற்றும் தொழில்கள் குறித்த பிரதம மந்திரியின் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு ப்பின், ரத்தன் டாடாவை இந்தியாவின் மிகவும் நன்மதிப்பு பெற்ற வணிகத் தலைவர் என்று குறிப்பிட்டு, அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று போர்ப்ஸ் இதழ் கருத்து வெளியிட்டது.

மிட்சுபிஷி கார்பரேஷன், அமெரிக்க பன்னாட்டுக் குழுமம், ஜேபி மார்கன் சேஸ் மற்றும் பூஸ் ஆலன் ஹாமில்டன் ஆகிய அமைப்புகளின் பன்னாட்டு ஆலோசனை வாரியங்களின் உறுப்பினராக உள்ளமை, ரத்தன் டாடாவின் வெளிநாட்டுத் தொடர்புகளுள் அடங்கும். மேலும் அவர், RAND கார்பரேஷன், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் அவர் கல்வி கற்ற, கார்நெல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.தென்னாப்பிரிக்கக் குடியரசின் பன்னாட்டு முதலீட்டு மன்றத்தின் குழு உறுப்பினராகவும்,நியூயார்க் பங்குச் சந்தையின் ஆசிய-பசிபிக் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார். கிழக்கு-மேற்கு மையத்தின் ஆளுகைக் குழுவிலும், RAND's மையத்தின் ஆசிய-பசிபிக் கொள்கை மைய ஆலோசனைக் குழுவிலும் டாடா உறுப்பினராக உள்ளார். மேலும், அவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய AIDS திட்டத்தின் குழுவிலும் பணியாற்றுகிறார்.

26 ஜனவரி 2000 அன்று, 50 ஆவது இந்தியக் குடியரசு தினத்தையொட்டி, படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் மூன்றாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம பூஷண் விருது, ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்கள்.

2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஜோவ் நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டம் ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்கள்.

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள, தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவிற்கு ரத்தன் டாடாவை தேர்ந்தெடுத்தார்கள்.

2006 ஆம் ஆண்டில், பொறுப்புடைய முதலாளித்துவத்திற்கான FIRST விருது அவருக்கு வழங்கினார்கள்.

மார்ச் 2006 ஆம் ஆண்டில், பொருளாதாரக் கல்விக்காக ராபர்ட் எஸ். ஹாட்பீல்ட் பெல்லோ விருதினை வழங்கி, கார்நெல் பல்கலைக்கழகம் டாடாவை கௌரவித்தது. வணிகத் துறையில் சிறப்பு வாய்ந்த தனியருக்கு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இவ்விருது மிகப்பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.

2008 ஆம் ஆண்டிற்கான NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவ்விருது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று மும்பையில் வழங்கினார்கள். 2007 ஆம் ஆண்டு வழங்கிய, நற்பணிகளுக்கான கார்னகி பதக்கத்தை, டாடா குடும்பத்தின் சார்பாக, ரத்தன் டாடா ஏற்றுக்கொண்டார்.

2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்ச்யூன் இதழ் வெளியிட்ட மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றார்.

2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், டைம் இதழ் வெளியிட்ட, உலகின் மிக செல்வாக்குடைய நூறு பேர் அடங்கிய பட்டியலில் திரு டாடா இடம் பிடித்தார். டாடா, ஒரு இலட்ச ரூபாய் காரான நானோவை தயாரித்து வெளியிட்டதற்குப் பெரிதும் புகழப் பெற்றார்.

படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம விபூஷண் விருது, 2008 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அவருக்கு வழங்கினார்கள்.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூர் அரசாங்கம் கௌரவக் குடிமகன் தகுதியை ரத்தன் டாடாவுக்கு வழங்கியது. தீவு நாடான அதனுடன் தொடர்ந்த வணிக உறவையும், சிங்கப்பூரில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கு அவரது பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இதை வழங்கினார்கள். இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்தியர் ரத்தன் டாடா ஆவார்.

2009 ஆம் ஆண்டில் அவர் மதிப்பார்ந்த பிரித்தானிய பேரரசின் வீரத் தலைவராக (honorary Knight Commander of the British Empire) நியமிக்கப்பட்டார்.

ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் வழங்கிய வணிக மேலாண்மைக்கான கௌரவ முனைவர் பட்டம்; பாங்காக்கில் உள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் வழங்கிய தொழில்நுட்பத்திற்கான கௌரவ முனைவர் பட்டம்; வாரிக் பல்கலைக்கழகம் வழங்கிய அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டம்; மற்றும் லண்டன் ஸ்கூல் ஒப் எகொநோமிக்ஸ் வழங்கிய கௌரவ பெல்லோஷிப் ஆகியவை அவர் பெற்ற பிற விருதுகளாகும்.


ஐயா நம்மாழ்வார்:



இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் "இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று" சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார்.

ஏன் என்று நான் கேட்டதற்கு, "உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள "டீ" தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை" என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது.


பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார்.



பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச்சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இந்த செல்போன் சார்ஜர் கருவியை பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியை சுற்றும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதனுடன் இணைத்துள்ள செல்போன் சார்ஜ் ஆகிறது. இதற்கு தயார்செய்ய அதிகபட்சமாக ரூ.350 வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ(6 வோல்ட்), தகடால் ஆன விசிறி, டையோடு(4007), வயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களை கொண்டு இதை தயாரிக்கலாம். பஸ், ஆட்டோ, கார், பைக் கோன்ற வாகனங்களில் நெடுந்து£ரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர் கூறினார்.

நமக்கென்ன என்று இல்லாமல் ஒரு தமிழனின் சாதனையை உலகுக்கு எடுத்துரைப்போம் "SHARE "செய்து !!!


மின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இருட்டைச் சமாளிப்பதற்குமான டிப்ஸ்கள் !!!!!



தவிர்க்கவே முடியாதது... தமிழகமும் மின் வெட்டும் என்றாகிவிட்டது!மின்சாரம் இருக்கும் நேரங்களில் அதை அதீதமாகச் செலவழிப்பது, மின் வெட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மின் சிக்கனம் தேவை இக்கணம்.

டாஸ்க் லைட்டிங்’ எனும் முறையைப் பின்பற்றலாம். அதாவது, உங்கள் வேலைக்குத் தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, படுக்கை அறையில் புத்தகம் படிக்கும் சமயம், மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப்பை மட்டும் பயன்படுத்துவது.

செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் ப்ளக்கை மின்சார இணைப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். என்னதான் சுவிட்சை ஆஃப் செய்தாலும், அதில் மின்சாரம் கடந்துகொண்டேதான் இருக்கும். அதனால் மின்சாரம் விரயமாவதுடன், மின் சாதனப் பொருட்களுக்குச் சேதமும் உண்டாகலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் 'கன்டென்சர் காயில்’-ஐ வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். அதில் படியும் தூசி, குளிர்சாதனப் பெட்டியின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து 25 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.

மேஜை விளக்கினை அறையின் ஓரத்தில் வைக்கவும். அதனால், விளக்கின் ஒளி இருபுறச் சுவர்களிலும் பட்டு பிரகாசமாகப் பிரதிபலிக்கும்.

வீட்டு உபயோகத்துக்கு என்றால், 'டெஸ்க்டாப்’ கணினியைவிட லேப்டாப்பே சிறந்தது. லேப்டாப் கணினியைவிட டெஸ்க்டாப் கணினி ஐந்து மடங்கு அதிகமான மின்சாரத்தை உட்கொள்ளும். ஒருவேளை டெஸ்க்டாப் கணினி வாங்கினாலும், அதற்கு எல்.சி.டி. மானிட்டரையே தேர்ந்தெடுங்கள்.

கணினியில் ஸ்க்ரீன்சேவர்கள் வைத்தால், மின்சாரப் பயன்பாடு குறையும் என்பது தவறு. பயன்பாடு இல்லாத நேரத்தில், மானிட்டரை அணைத்துவிடுவதே சிறந்தது.

வாஷிங் மெஷினின் அதிகபட்சக் கொள்ளவுக்குத் துணிகளை நிரப்புங்கள்.

ப்ரிஜ்ஜின் குளிர்நிலையை 37 டிகிரி முதல் 40 டிகிரிக்குள் செட் செய்துகொள்ளுங்கள்.

திரவப் பொருட்களை மூடிவைத்து பிறகு ஃப்ரிஜ்ஜுக்குள் வைக்கவும். திறந்துவைத்தால், ஃப்ரிஜ்ஜுக்குள் ஈரப்பதம் அதிகமாகும். அதனால், அதிக வேலைப் பளு காரணமாக மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.

டிஸ்போஸபிள் பேட்டரிகளைவிட ரீ-சார்ஜ் வசதியுள்ள பேட்டரிகளைப் பயன்படுத்தலாம்.
மின் வெட்டு சமயங்களைச் சமாளிக்க, சந்தையில் என்னவெல்லாம் பொருட்கள் கிடைக்கின்றன...

எமர்ஜென்ஸி ஃபேன்:

டூ இன் ஒன் அல்லது த்ரீ இன் ஒன் ஆகக் கிடைக்கிறது இந்த எமர்ஜென்ஸி ஃபேன். எமர்ஜென்ஸி விளக்கும் ஃபேனும் பொருத்தப்பட்டு இருக்கும் சாதனத்தின் விலை 650 முதல் 800 வரை. ஃபேன், விளக்கு மற்றும் எஃப்.எம். ரேடியோ ஆகியவை இணைந்த சாதனம் 1,000 முதல் 1,200 வரை. சார்ஜ் செய்துகொண்டு மின்சாரம் இல்லாத சமயங்களில் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சாதனங்களை முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு, ஃபேன், விளக்கு, எஃப்.எம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை இயங்கும். மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும்.

மொபைல் பவர் பேக்-அப்:
மின் வெட்டு சமயம் உங்கள் அலைபேசியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள உதவும் சாதனம் இது. மின்சாரம் இருக்கும் சமயம் இதை முழுக்க சார்ஜ் செய்துவிட வேண்டும். சுமார் மூன்று மணி நேரங்களில் இது சார்ஜ் ஆகிவிடும். பிறகு, மின்சாரம் இல்லாத சமயம் அலைபேசியில் இந்தச் சாதனம் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இரண்டு அலைபேசிகளை இதன் மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதன் விலை 1,600 முதல் 2,000 வரை!

மினி இன்வெர்ட்டர்:
வழக்கமான இன்வெர்ட்டரின் மினி வடிவம். இதன் மூலம் லேப்டாப் இயக்கம், மொபைல் சார்ஜ் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இதன் விலை 2,500 முதல் 3,500 வரை.

சோலார் லேம்ப்:
வெயிலில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருளைப் போக்கும் விளக்குகள் இவை. போட்டோவால்டிக் சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி இந்தச் சாதனத்தின் எல்.இ.டி. விளக்கை ஒளிரவைக்கும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டால், இதன் சோலார் பேனல் சக்தியை உள்வாங்கிக்கொண்டு, மின் வெட்டு சமயங்களில் ஆபத்பாந்த வனாக ஒளி கொடுக்கும். முழுக்க சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு இது சுமார் ஆறு மணி நேரம் வரை ஒளி கொடுக்கும். விலை 500 முதல் 800 வரை!


கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி...



டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Step1

ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

Step2

கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.

Step3

அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)

Step4

வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.

Step5

இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.

Step6

இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.

இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.

(அடையனும்..ஹூம்....நமக்கு இவ்வளவு அறிவு இருப்பதை தெரிந்து இதிலிருந்தும் தப்பிக்க ஒருவேளை பாழாய்ப் போன கொசுக்கள் புதிய யுக்தி எதையாவது கடைப் பிடிக்க ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வளவு தான் இப்போதே சொல்லிப்புட்டேன்.)

நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.

எப்படியோ இந்த வழியிலாவது கொசுக்கள் ஒழிந்தால் சரி தான். இந்த எமன்களிடமிருந்து நம்மை காப்பாற்ற இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும் என இறையை வேண்டும் உங்கள், parasuramsv


காஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க..குறைந்த செலவில் இதை முயற்சித்து பாருங்கள்



''விவசாயிகள் மத்தியில் முன்பு சாண எரிவாயுத் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், சாண எரிவாயுக்கலன் அமைக்க 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதோடு, அதைப் பராமரிப்பதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற சில காரணங்களால் சாண எரிவாயு உபயோகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால், இந்தச் சிரமங்களைத் தவிர்க்கும் விதத்தில்தான் பாலிதீன் ஷீட் மூலம் சாண எரிவாயுக்கலன் தயாரிக்கப்படுகிறது. இரண்டு மாடுகள் இருந்தால், ஒரு கன மீட்டர் அளவுக்குத் தினமும் எரிவாயு உற்பத்தி செய்யலாம். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்குச் சமையல் செய்ய இந்த அளவு எரிவாயு போதும்.

பாலிதீன் ஷீட் மூலம் கலன் அமைக்க, 6 ஆயிரத்து 500 ரூபாய்தான் செலவாகும். செங்கல், சிமென்ட்... எதுவும் தேவை இல்லை. நான்கரை அடி சதுரத்தில் 4 அடி ஆழத்துக்குக் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், பாலிதீன் ஷீட்டைப் போட்டு கலன் அமைத்து விடலாம். அதில், சாணத்தைக் கரைத்து ஊற்றினால்... சில நாட்களில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி விடும். பாலிதீன் ஷீட் பலூன் போல உப்பி விடும். அதில் இருந்து அடுப்புக்கு, இணைப்புக் கொடுத்து எரிக்கலாம்.

'சில்லரி’ என்று சொல்லப்படும், கழிவு வெளி வருவதற்கும் இக்கலனில் அமைப்பு உள்ளது. இக்கழிவை இயற்கை உரமாகப் படுத்தலாம். எளிதாக அமைத்து விடக்கூடிய இந்தக் கலன் 7 ஆண்டுகள் வரை உழைக்கும் திறன் வாய்ந்தது. சேலம், கோயம்புத்தூர், ஈரோடு... போன்ற நகரங்களில் இந்த பாலீதீன் ஷீட் எரிவாயுக் கலன் கிடைக்கிறது.'


சமயோசிதத்தால் முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவி



அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், நேற்று அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.

இதனால், பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது, கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும் மூழ்கிய படி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி கிடந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியரை பிடித்துக் கொள்ள சொன்னார். ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை.

பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி. முதியவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்குள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிய ரவி, முதியவரை குளிப்பாட்டிய பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தார். அவருக்கு இடுப்பு, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவியை, அப்பகுதி மக்கள் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். அதிகாலையில் கூவம் பாலத்தில், சாலையை கடந்தபோது கால் தவறி விழுந்து விட்டார் என தெரிய வந்தது


அஞ்சு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்!



ஜூனியர் விகடனில் இருந்து...

பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாபகத்துக்கு வரும். என்ன செய்கிறார் என்று தேடிப் பார்த்தோம். சென்னையில் வசித்தாலும் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கும் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் பிடித்தோம். இன்னும் அதே உற்சாகத்தோடு இருக்கிறார்.

''ஆகஸ்ட் வரைக்கும் காத்திருங்க சார். நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியோட வர்றேன். எல்லா சதிகளையும் முறியடிச்சு வெற்றிக்கோட்டை நெருங் கிட்டேன்'' என்று உற்சாகம் ததும்பப் பேசும் ராமர் பிள்ளையின் பேச்சு முழுவதும் அதிரடி சரவெடி.

''நான் சாதாரணக் கிராமத்து மனுஷன். உலகத் தையே வாட்டி வதைக்கிற எரிபொருள் பிரச்னைக்கு என் அறிவுக்கு எட்டுன அளவில் ஒரு பொருளைக் கண்டுபிடிச்சு, 'மூலிகைப் பெட்ரோல்’னு பேர் வெச்சேன். அப்போ நாடே பரபரப்பாச்சு. நாலு மாநில முதல்வர்களுக்கு முன், அதை சோதனை செஞ்சு காட்டினேன். ஆனால் என் வளர்ச்சி பல பேரைப் பயமுறுத்த ஆரம்பிச்சது. 'நான் ஒரு ஃபிராடு’னு கதை பரப்ப ஆரம்பிச்சாங்க. 'ராமர் பிள்ளை கண்டுபிடிச்சது பெட்ரோலே இல்லை’னு சொன்னாங்க. சரி, இருக்கட்டும். நான் கண்டுபிடிச்சது பெட்ரோல் இல்லைன்னே வெச்சுக் குவோம். ஆனால், என் கண்டுபிடிப்பை வண்டியில் ஊத்தினா வண்டி ஓடுதுல்ல... அதனால் வண்டிக்கு எந்த பாதிப்பும் இல்லேல்ல... அப்புறம் என்ன?

இத்தனைக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் 42 ரூபாய் விற்ற காலத்தில் ஒரு லிட்டர் 13 ரூபாய்க்கு நான் கொடுத்தேன். கொஞ்ச நஞ்சம் இல்லீங்க, 13 லட்சம் லிட்டர் பெட்ரோல் தயாரிச்சு வித்திருக்கேன். அதைக்கூட, 'பெட்ரோலிய மூலப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிச்சுட்டு பொய் சொல்றார்’னு சொன்னாங்க. 42 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி 13 ரூபாய்க்கு விற்க, நான் என்ன லூஸா?

நான் தயாரிச்சு விற்ற 13 லட்சம் லிட்டருக்கும் அரசாங்கத்துக்கு வரி கட்டி இருக்கேன். என்னைத் தப்புன்னு சொல்ற அரசாங்கம், அப்புறம் ஏன் என்கிட்ட வரி வாங்குச்சு. நான் கண்டுபிடிச்ச எரிபொருளுக்கு, 'மூலிகை பெட்ரோல்’னு பேர் வெச்சதுதான் நான் பண்ண ஒரே தப்பு. இப்போ சொல்றேன், நான் கண்டுபிடிச்சது மூலிகைப் பெட்ரோலே கிடையாது.

அது ஒரு மாற்று எரிபொருள். அதுல என்ன தப்புன்னாலும் சொல்லுங்க, ஒப்புக்கிறேன். 'இதைப் போட்டா வண்டி சீக்கிரம் ரிப்பேர் ஆகுது. வழக்கத்தை விட குறைவான மைலேஜ் கிடைக்குது. சுற்றுச்சூழலுக்கு ஆபத்து’ இப்படி எந்தக் குறையையும் என் மாற்று எரிபொருளில் சொல்லவே முடியாது'' என்று படபடவெனப் பேசியவரிடம், ''ஆகஸ்ட் அறிவிப்புப் பற்றி சொல்லுங்களேன்'' என்றதும், அடுத்த ஷாக் கொடுத்தார்.

''என் கண்டுபிடிப்பை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கணும்னு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜியை சந்திச்சுப் பேசினேன். அவர்கிட்ட என் மாற்று எரிபொருளை சோதனை செஞ்சு காட்டினேன். அதைத்தொடர்ந்து அண்ணா ஹஜாரே, பாபா ராம்தேவையும் சந்திச்சுப் பேசினேன். இந்த மும்மூர்த்திகளும் என் கண்டுபிடிப்பைப் பார்த்து ஆர்வமாயிட்டாங்க. அதிலும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி, என் கண்டுபிடிப்பைத் தத்து எடுத்துக்கிட்டதுபோல, எல்லா உதவிகளையும் செஞ்சார். கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் செலவில் மாற்று எரிபொருள் தயாரிப்பதற்கான இயந்திரம் தயாராகிடுச்சு.

ஹரித்துவாரில் இருக்கு. சென்னையிலும் இடம் பார்த்தாச்சு. கடைசிக் கட்ட வேலைகள் கொஞ்சம் பாக்கி. அதுவும் முடிஞ்சதுன்னா, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உற்பத்தி ஆரம்பிச்சுடும். பரபரப்பா வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். ஆனா இப்போகூட, ரவிசங்கர்ஜியை சந்திக்கப் போற ஒவ்வொரு தடவையும் அதைத் தடுக்கிறதுக்கு பல பேர் சதி செய்றாங்க. ஒருத்தனை வளரவிடாமக் காலைப் பிடிச்சு இழுத்துவிடுறதுல இத்தனைப் பேர் ஏன் ஆர்வமா இருக்காங்கன்னு புரியலை...'' என்ற ராமர் பிள்ளை, அவரது மாற்று எரிபொருள் ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குக் கிடைக்கும் என்று ஆச்சர்யப் படுத்துகிறார்.

''ஆமா சார், 15 வருஷத்துக்கு முன்னால ஒரு லிட்டர் 13 ரூபாய்னு வித்தேன். இப்போ தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு. நானும் சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அதனால ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குத் தயாரிக்கலாம்.

வரி விதிச்சா அதிக பட்சம் ஏழு ரூபாய் வரும். இப்போ ஒரு லிட்டர் 70 ரூபாய். இந்தக் காசுக்கு 14 லிட்டர் மாற்று எரிபொருள் போடலாம். நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறைக்கு வரும்போது எல்லாம் சரியாகிடும். நிச்சயம் என்னை நிரூபிப்பேன். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் திருப்புமுனையான செய்தியாக இது இருக்கும்!'' என்று படபடக்கிறார்..


அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு தமிழர் - கே.ஆர். ஸ்ரீதர்




கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

கே.ஆர். ஸ்ரீதர்....



திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.

இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை...


பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.



சித்தர்களின் அறிவியலின்படி மானிடர் அனைவருள்ளேயும் விநாயகம் எனும் கட்டற்ற, முதன்மையான சக்தி ஒன்றுண்டு. இதை ஒருவர் உள்நோக்கி (தியானித்து) தட்டி எழுப்ப வல்லவராயின் அவர் தன்னை(பிள்ளை) யார் என்று அறியும் இறைநிலையை அடைகிறார். தானாகிய பிள்ளையை யார் என்று அறிந்த சித்தர்கள் அனைவரும் பிள்ளையார்களே. நாமனைவரும் பிள்ளையாராகும்(தன்னையறியும் / சிவநிலை / இறைநிலை யடையும்) வாய்ப்பு அரிய பிறப்பான மானிடர் அனைவருக்கும் இயற்கையாவே உண்டு.

தனது குற்றங்களையும் பாவங்களையும் இறைவனிடம் ஒப்புக் கொடுத்து மன்னிப்புப் பெறும் ஒரு உபாசனையாக தோப்புக்கரணம் இருந்துவந்துள்ளது. வினைகளை வேரறுக்கும்; கடவுளான விநாயக வழிபாட்டில் தோப்புக்கரணம் முக்கிய இடம் வகித்துவருகிறது. பாடசாலைகளிலும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் குற்றங்களுக்கு வழங்கப்படும் ஒரு தண்டனையாகவும் தோப்புக் கரணம் கொள்ளப்பட்டுவந்திருக்கிறது. இந்த வகையில் கீழைத்தேய மக்களுக்கு இத் தோப்புக்கரணம் நன்கு அறிமுகமிக்க ஒன்றாகும்.

செய்யும் முறை

பாதங்களை ஒருங்கு குவித்தபடி நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.

மேலைத்தேய மருத்தவ ஆராய்ச்சிகளும் சிபார்சுகளும்

* லொஸ் ஏஞ்சலைச் சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் றொபின்ஸ் (Dr.Eric Robins) தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுவதாக கூறுகிறார். பரீட்சையில் குறைந்த புள்ளிகளை எடுத்த மாணவன் தோப்புக்கரணப் பயிற்சியின் பின் நல்ல புள்ளிகளைப் பெற்றதாகக் காட்டுகிறார்.

* யேல் பல்கலைக்கழக (University of Yale) நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் ( Dr.Eugenius Aug) அங் இடது கையால் வலத காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்.

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விடயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

காணொளி: பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.



காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? மத்திய அரசை திணற வைத்த சிறுமி !!!!



தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .

இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது.

இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.